பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்த நிலையில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்து பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அட்டாவுல்லா தரார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவு வரவேற்கத்தது. இந்த தேசபக்திமிக்க செயல் நாட்டின் ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கிறது.
நாட்டின் கண்ணியத்தையும், இறையாண்மையையும் நிலைநிறுத்தும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் முயற்சியை பாராட்டுகிறோம்.
தேசிய நலனுக்காக தொடர்ந்து செயற்பட்டு, ஒற்றுமை, அமைதி மற்றும் தேசபக்தியை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஊடக பங்குதாரர்களின் முயற்சிகள் பெருமை அளிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.