Site icon Radical Sri Lanka Tamil

வியட்நாமின் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டு நேற்று (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (04) வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வியட்நாம் கம்யூனிஸக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் வெளியுறவுத் துறை பிரதி அமைச்சருமான நுயென் மான் குவோங் (Nguyen Manh Cuong) உள்ளிட்ட அரச பிரதிநிதிகளால் அமோகமாக வரவேற்கப்பட்டனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டேம் (Trinh Thi Tam), வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் போசித பெரேரா மற்றும் இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர்.

இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஹனோயில் உள்ள வியட்நாம் கம்யூனிஸ கட்சியின் (CPV) மத்திய குழு தலைமையகத்தில் கம்யூனிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் டோ லாமை ( Tô Lâm) சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி நாளை (05) வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களிலும் ஈடுபட உள்ளார்.

மேலும், மே 06 ஆம் திகதி ஹோ சி மிங் நகரில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிறப்புரை நிகழ்த்துவார்.

இந்த விஜயத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடவும், வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரச விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் இணைந்துகொள்கின்றது.

Exit mobile version